மெரைன் இன்ஜினியர் படுகொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை மதுரவாயலில் மெரைன் இன்ஜினியர் (Marine Engineer) ஒருவரை எரித்துக் கொலை செய்த வழக்கில், தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரவாயலைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், கடன் பிரச்சினை காரணமாகக் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாகக் கார்மேகம், பூபாலன், கோகுல் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோகுல் என்பவரைத் தவிர மற்ற நால்வரும் குற்றவாளிகள் என உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து, கார்மேகம் மற்றும் பூபாலன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் நீதி கிடைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.







