தேர்தல் புறக்கணிப்பு: துறையூர் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் போராட்டம்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலைப் பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பச்சைமலைப் பகுதியில் சுமார் 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில், தங்கள் நீண்ட காலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாய், ஆத்தி நாடு மற்றும் கோம்பை ஊராட்சிகளுக்கு ‘108’ ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் மற்றும் மலைப்பகுதியில் ஓர் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் எதிரொலியாக, அரசியல்வாதிகள் யாரும் வாக்கு சேகரிக்கத் தங்கள் பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரித்து பச்சைமலை முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டும் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







