புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி: மேடையில் ஊழல் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் மின்பஸ்கள் தொடக்க விழா கலவரமாக மாறியது. நிகழ்வில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டியதுடன், தொகுதி எம்எல்ஏ மேடையில் ஏறி ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வெளிநடப்பு செய்தார்.
புதுவை அரசின் போக்குவரத்து துறை சார்பில் பேருந்து பணிமனை, மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், மின் பஸ், மின் ரிக்ஷா, ஆட்டோ சவாரி செயலி தொடக்க விழா தாவரவியல் பூங்கா எதிரில் நடைபெற்றது.
மின் பஸ்களுக்கு சார்ஜிங் மற்றும் பராமரிப்பு பணிகளை ஐதராபாத் நிறுவனமொன்று மேற்கொள்கிறது. இதனால், அரசு போக்குவரத்து துறை தனியார்மயமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையிலான பொது நல அமைப்புகள் முன்வைத்திருந்தன.
நிகழ்வில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், எம்.பி. செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையில், எம்எல்ஏ நேரு தலைமையில் போராட்டக்காரர்கள் கருப்பு கொடிகளுடன் திடீரென குவிந்தனர். இதனால் போலீசார் ஆளுநர், முதல்வரை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் எம்எல்ஏ நேருவின் மகன் ரஞ்சித்குமார் சட்டை கிழிந்தது, உதவியாளர் செங்குட்டுவன் காயமடைந்தார். பின்னர், போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.
மேடையில் அமர்ந்திருந்த ஆளுநர் மற்றும் முதல்வரை நோக்கி எம்எல்ஏ நேரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார். பின்னர், அதிருப்தி தெரிவித்து விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார்.