வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகளிடம் கட்டாயப் பண வசூல் – போராட்டத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருதாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இந்த மையத்திற்குப் கொண்டு வருகின்றனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் 45 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பணம் தராத விவசாயிகளின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 2 கிலோ வரை நெல் திருடப்படுவதாகவும், இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் கொள்முதல் நிலைய அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்துள்ள விவசாயிகள், இந்தப் பண வசூல் மற்றும் நெல் திருட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். உரியத் தீர்வு காணப்படாவிட்டால், வரும் நாட்களில் பொதுமக்களையும் விவசாயிகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








