“எட்டு கோடி மக்களுடன்தான் என் கூட்டணி”: மது, கஞ்சா கலாச்சாரத்திற்கு எதிராகச் சீமான் ஆவேச முழக்கம்!
ராணிப்பேட்டை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணிகளை அமைத்துக் கொண்டிருக்கும் வேளையில், தான் தமிழகத்தின் எட்டு கோடி மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தலுக்காகக் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த சீமான், “மது விற்பனையை 40 ஆயிரம் கோடியிலிருந்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்துவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தற்போது பெருகி வரும் மது மற்றும் கஞ்சா கலாச்சாரத்தால் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இத்தகைய போதைப் பொருட்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், மாற்றத்திற்கான அரசியலைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.








