அதிக மழையையும் சமாளிக்க அரசு முழுமையாகத் தயார் – துணை முதல்வர் உதயநிதி
எந்த அளவுக்கு மழை பெய்தாலும், அதனைச் சமாளிக்கும் வகையில் தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட சென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். வியாசர்பாடி ஜீரோ பாயிண்டில் தொடங்கும் கால்வாயில் தூர்வாரும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.
அதிகாரிகளிடம் பேசும் போது, “மழைப்பொழிவு அதிகரித்தாலும் அதனை துரிதமாகக் கையாளும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி கூறியதாவது:
“வட சென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள் உள்ளிட்ட மொத்தம் 331 கிலோமீட்டர் நீளத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பணிகளை கண்காணித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பொதுமக்கள் முன்வைக்கும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் கவனிக்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த பத்து நாட்களில் பெரிய அளவில் மழை ஏற்படாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்க தமிழ்நாடு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது.”
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.