திமுகவின் ‘டெல்லி – தமிழ்நாடு’ அரசியல் இனி எடுபடாது: டிடிவி தினகரன் காட்டம்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (NDA) கட்சியினர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டாலே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அச்சம் ஏற்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி – தமிழ்நாடு என்று பிரித்துப் பேசி இனிமேலும் தமிழக மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.
திமுக அரசை வீழ்த்துவதற்குத் தமிழக மக்கள் முழுமையாகத் தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்ட தினகரன், பீகாரில் நிலவுவதைப் போன்ற அரசியல் ஒற்றுமையுடன் தமிழகத்திலும் அனைவரும் இணைந்து திமுகவைத் தோற்கடிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சசிகலாவைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், சசிகலாவைக் கூட்டணியில் கொண்டுவரத் தற்போது எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டமே தங்களின் இலக்கு என்பதையும் அவர் தனது பேட்டியின் வாயிலாக உறுதிப்படுத்தினார்.









