அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் தனது கச்சா எண்ணெய் விற்பனை மூலம் நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் 1,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் 20 நாட்களைக் கடந்து நீடித்து வரும் சூழலில், ஈரான் இதற்குப் பதில் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ‘ஹோர்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி ஈரான் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது. முன்னதாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் கச்சா எண்ணெய்யைச் சந்தைப்படுத்த முடியாமல் தவித்த ஈரான், தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைச் சாதகமாக்கிக் கொண்டுள்ளது. ‘கேப்லர்’ (Kpler) தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, போர்ச் சூழலுக்கு மத்தியிலும் சுமார் 2.4 கோடி பேரல் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கடந்து சென்றுள்ளது. போர் ஒருபுறம் தீவிரமடைந்தாலும், பொருளாதார ரீதியாக ஈரான் பலமடைந்து வருவது உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.









