பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி
பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அந்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் (ISI) இடையே கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்திற்கும், உளவு அமைப்பிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு கடந்த சில மாதங்களாகவே பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் போன்ற அமைப்புகள் நடத்திய தொடர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய ஐஎஸ்ஐ தவறியதால், பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தின் நகர்வுகள் குறித்து ஐஎஸ்ஐ எவ்வித முன்னெச்சரிக்கையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தத் தோல்விகளால் அதிருப்தியடைந்துள்ள அசிம் முனீர், உளவுத்துறையில் பெரிய அளவிலான மறுசீரமைப்புகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் (IANS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உயரதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், உளவு அமைப்புகள் தங்கள் செயல்திறனை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று அசிம் முனீர் நேரடியாகவே எச்சரித்திருப்பது பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









