ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
ஈரான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும், ஆனால் தற்போதைய சூழலில் போர்நிறுத்தம் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஈரானை அமெரிக்கா மிகக் கடுமையாகத் தாக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வேறு யாராலும் இந்த அளவுக்குக் கடுமையானத் தாக்குதலை முன்னெடுக்க முடியுமா என்பது சந்தேகமே என்று கூறினார்.
குறிப்பாக, ஹோர்மூஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீட்டெடுக்க அதிக எண்ணிக்கையிலான படைகளும், கூடுதல் ராணுவ உதவிகளும் தேவைப்படுவதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் நேட்டோ (NATO) அமைப்பால் அமெரிக்காவிற்கு உதவ முடியும் என்றாலும், அந்த அமைப்பிற்கு இதுவரை அதற்கான துணிச்சல் வரவில்லை என அவர் விமர்சித்துள்ளார். “ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம்; ஆனால் போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என அவர் ஆணித்தரமாகப் பதிலளித்துள்ளது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









