ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிரடி மாற்றம்: நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் உருவாக்கம்
ஹரியானா:
ஹரியானாவில் மார்ச் 13 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா (பொதுக்குழு) கூட்டத்தில், அமைப்பின் செயல்பாடுகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, அமைப்பின் பணிகளை இன்னும் ஆழமாக எடுத்துச் செல்ல புதிய கட்டமைப்பு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
அமைப்பின் பணிகள் அனைத்து பகுதிகளையும் சென்றடைய வேண்டுமானால், அதன் நிர்வாக அலகுகள் (Units) சிறியதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக, தற்போது நடைமுறையில் உள்ள மாநில வாரியான பிரிவுகளுக்குப் பதிலாக, ‘கோட்டங்களை’ (Divisions) உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியின் மூலம் இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் உருவாக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.
இருப்பினும், இந்த புதிய நிர்வாகக் கட்டமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிறைவடைந்த பின்னரே முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை தற்போதுள்ள நிலையே தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த மாற்றத்தின் மூலம் நிர்வாக ரீதியாக கூடுதல் கவனம் செலுத்தவும், பணிகளை விரைவுபடுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.










