விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது – போலீஸ் அதிரடி
விளாத்திக்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ஆம் தேதி காணாமல் போன மாணவி, மறுநாள் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கிராம மக்கள் கடந்த 9 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு ஏற்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேருக்கு DNA பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகளுக்காகப் போலீசார் காத்திருந்தனர். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மூலம் முக்கியத் தடயம் கிடைத்தது.
விசாரணையில் அந்த வாகனம் திருடப்பட்டது என்பதும், அதை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தங்கியிருந்த இடங்களுக்கும் அழைத்துச் சென்று ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.









