தேர்தல் விதியா? மத உணர்வா? கொடைக்கானலில் கந்த சஷ்டி கவச கல்வெட்டு மறைப்பால் பரபரப்பு!
கொடைக்கானல்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் உள்ள கந்த சஷ்டி கவச கல்வெட்டு காகிதங்களால் மறைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைப்பு மற்றும் எதிர்ப்பு:
பொதுவாகத் தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள், பெயர்கள் மற்றும் கட்சி சார்ந்த கல்வெட்டுகள் துணி அல்லது காகிதங்கள் மூலம் மறைக்கப்படுவது வழக்கம். ஆனால், குறிஞ்சி ஆண்டவர் கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டில் கந்த சஷ்டி கவசப் பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதில் எந்தவொரு அரசியல் கட்சியின் பெயரோ அல்லது தலைவர்களின் படங்களோ இல்லாத நிலையில், இக்கல்வெட்டை அறநிலையத்துறை காகிதம் கொண்டு மூடியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்து முன்னணி போராட்டம்:
“அரசியல் தொடர்பே இல்லாத ஆன்மீகப் பாடல்களை ஏன் மறைக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பி இந்து முன்னணியினர் கோயில் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர். நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கோயில் பொறுப்பாளர்கள் உடனடியாகக் கல்வெட்டை மூடியிருந்த காகிதங்களை அகற்றினர்.
தேர்தல் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் காட்டப்படும் அதீத ஆர்வம், மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமையக்கூடாது எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.










