மாற்றுத்திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு: சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்த கே.மணிவண்ணன் என்பவர், இது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்:
மனுதாரர் கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கை மனுக்களுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கத் தற்போது வழிவகை செய்யப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, உரியச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு குறிப்பிட்டச் சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






