மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் இல்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணையப்போவதாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் திட்டவட்டமாக மறுத்தார். சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளில் தங்களுக்கு எவ்வித சமரசமும் கிடையாது என்றும், தமிழகத்தில் அமையப்போகும் ஆட்சி தவெக தலைமையிலான ஆட்சியாகவே இருக்கும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் முதல் மாநாட்டில் குறிப்பிட்டது போலவே, அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதப் பேச்சுவார்த்தையோ அல்லது சமரசமோ செய்துகொள்ளப் போவதில்லை என்று அவர் விளக்கமளித்தார். கூட்டணி குறித்துப் பரப்பப்படும் பொய்யானப் பிரச்சாரங்களைக் கேட்டுத் தொண்டர்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும், அவதூறுகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி, அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த யூகங்களுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.