“தமிழகத்தில் சட்டத்தின் மீது பயமில்லை”: பெண் காவலர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை கடும் சாடல்!
கோயம்புத்தூர்:
கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரி செந்தில்குமார், ஒரு பெண் காவலரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, திமுக அரசையும் காவல்துறையின் பாதுகாப்புச் சூழலையும் கடுமையாக விமர்சித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “காவல் நிலையத்திலேயே ஒரு பெண் காவலருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, இந்த கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் தங்களை எப்படிப் பாதுகாப்பாக உணர்வார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு உயர் காவல்துறை அதிகாரியே சக பெண் காவலரிடம் இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டிருப்பது, தமிழகம் எவ்வளவு அவலநிலையில் உள்ளது என்பதைக் காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், திமுக ஆட்சியில் யாருக்குமே சட்டத்தின் மீது பயம் இல்லை என்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிப்படையாகத் தெரிவதாகவும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.