தமிழகத்தில் 6 முக்கிய ரயில் வழித்தடங்களுக்கு இறுதி ஆய்வு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சென்னை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆறு முக்கியமான ரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
புதிய வழித்தடங்கள் மற்றும் விரிவாக்கப் பணிகள்:
தமிழகத்தில் ரயில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து எல்.முருகன் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் ஆறு வழித்தடங்களுக்கு ஆய்வுப் பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது:
- சென்னை – அரக்கோணம்: 5 மற்றும் 6-ஆம் வழித்தடங்கள்.
- அரக்கோணம் – ரேணிகுண்டா: 5 மற்றும் 6-ஆம் வழித்தடங்கள்.
- சென்னை – குடூர்: 5 மற்றும் 6-ஆம் வழித்தடங்கள்.
- விழுப்புரம் – திருச்சி – நாகர்கோவில்: 3 மற்றும் 4-ஆம் வழித்தடங்கள்.
- பாலக்காடு – பொள்ளாச்சி – போத்தனூர்: 2-ஆம் வழித்தடம்.
- திருச்சி – காரைக்குடி – மானாமதுரை – மதுரை: 2-ஆம் வழித்தடம்.
தொழில் வளர்ச்சிக்கு உந்துதல்:
“தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, ரயில் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மத்திய அரசு மெருகேற்றி வருகிறது” என்று அமைச்சர் எல்.முருகன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து புதிய பாதைகள் அமைக்கப்படும் போது, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சரக்கு போக்குவரத்தும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.