ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் மெகா தூய்மைப் பணி!
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழ்பெற்ற ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இன்று சிறப்பான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோயிலின் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 3-ம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நிறைவடைந்தது.
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்:
திருவிழாவிற்குப் பிறகு மலைக்கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்கள், காலி குடிநீர் பாட்டில்கள் மற்றும் பல்வேறு கழிவுகள் அதிகளவில் தேங்கிக் காணப்பட்டன. இது பக்தர்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
தன்னார்வலர்களின் பங்களிப்பு:
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்தப் பணிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் களத்தில் இறங்கி மலைக்கோயில் முழுவதையும் தூய்மைப்படுத்தினர். குப்பைகளை வகை வாரியாகப் பிரித்து அகற்றிய இவர்களின் இந்தச் சேவைக்கு அப்பகுதி மக்களும் பக்தர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.