திருநீர்மலை, வடபழனி கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு: அறநிலையத்துறை 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் மற்றும் வடபழனி கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 1,050 ஏக்கர் நிலம் இருந்ததற்கான வருவாய் ஆவணங்கள் உள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் ஆவணங்களைத் திருத்திச் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் தற்போது 157 ஏக்கர் நிலம் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கூறி சந்தானம் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.