தருமபுரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ: ஆம்புலன்ஸ் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு!
தருமபுரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காகப் போக்குவரத்து மாற்றப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் ஒன்று மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் பங்கேற்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை முன்னிட்டு, கல்லூரி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டதால், அப்பகுதியில் போலீசார் போக்குவரத்தைத் திடீரென நிறுத்தினர். இதனால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம், வேறு வழியின்றி மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, விழாவிற்குச் சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு, வாக்குறுதி அளித்தபடி 500 ரூபாய் வழங்காமல் 200 ரூபாய் மட்டுமே திமுகவினர் வழங்கியதாகப் பெண்கள் சிலர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.