4 சவரன் நகைக்காகக் கொடூரம்: மூதாட்டியைக் காட்டில் வைத்து கொலை செய்த தாய் – மகள் கைது!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, வெறும் 4 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த தாய் மற்றும் அவரது 17 வயது மகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாயமான மூதாட்டி:
திருச்சுழி அடுத்த பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா (62). இவர் கடந்த 8-ம் தேதி உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்குச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையின் ஒரு கட்டமாக, புலிக்குறிச்சி காட்டுப்பகுதியில் அம்பிகா சடலமாக மீட்கப்பட்டார்.
சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்:
இந்தக் கொலை தொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அம்பிகாவை இரு பெண்கள் தனியாக அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்தப் பெண்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் எஸ்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகாம்பாள் மற்றும் அவரது 17 வயது மகள் என்பது தெரியவந்தது.
நகைக்காகக் கொலை:
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அம்பிகா அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையைப் பறிக்கும் நோக்கில், அவரை ஆசை வார்த்தை கூறித் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து அவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பியது அம்பலமானது. இதனையடுத்து லோகாம்பாள் மற்றும் அவரது மகளைக் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். நகைக்காகத் தாயும் மகளும் இணைந்து மூதாட்டியைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.