ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடி தாக்குதல் அபாயம்: உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளைப் பதித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பொருளாதாரப் பாதையை முடக்கும் ஈரான்:
சுமார் 100 மைல் நீளமும் 21 மைல் அகலமும் கொண்ட ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகவே உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நடைபெறுகிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள் தங்களின் ஏற்றுமதிக்கு இப்பாதையையே நம்பியுள்ளன. குறிப்பாக, கத்தார் தனது எரிவாயு ஏற்றுமதிக்கு முழுமையாக இதையே சார்ந்துள்ளது. தற்போது இப்பா தையை ஈரான் மூடியுள்ளதால், தினசரி 1.98 கோடி பேரல் எண்ணெய் விநியோகம் 86 சதவீதம் வரை சரிந்து உலகப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது.
கண்ணிவெடி போர்முறை:
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), சிறிய படகுகள் மூலம் சீனா மற்றும் ரஷ்ய தயாரிப்பு உள்ளிட்ட சுமார் 6,000 கண்ணிவெடிகளைப் பதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் பதுங்கியிருக்கும் இவை, மேலே செல்லும் கப்பல்களின் காந்த விசையை உணர்ந்து தாமாகவே வெடிக்கும் திறன் கொண்டவை. “வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போல” இவற்றைக் கண்டறிந்து அகற்றுவது மிகக் கடினமானது என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் பதிலடி:
ஈரானின் கண்ணிவெடி வைக்கும் 16 கப்பல்களை அமெரிக்கா ஏற்கனவே அழித்துள்ளதோடு, அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக 20 மடங்கு கூடுதல் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரிலும் இதுபோன்ற கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஹார்மோஸ் ஜலசந்தியில் நிலவும் சூழல் ஒட்டுமொத்த உலகையும் இருளில் மூழ்கடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.