மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப்பை மற்றும் ஷூக்களுக்குப் பதிலாக நேரடியாக ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ₹135 கோடி மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை வழங்கும் விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் நேரம் என்பதால் டெண்டர் முறையில் புத்தகப்பை மற்றும் ஷூக்களைக் கொள்முதல் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதைக் குறிப்பிட்ட முதலமைச்சர், இதனால் சுமார் 80 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். இதற்கிடையே, 2024-25 நிதியாண்டில் பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படுவதாகக் கூறி, மற்ற வீரர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர், அனைவருக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறும் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.