“டாஸ்மாக் ஊழல் மூலம் ₹50,000 கோடி ஸ்டாலின் குடும்பத்திற்கு”: திருச்சியில் பியூஸ் கோயல் அதிரடி குற்றச்சாட்டு!
திருச்சியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெற உள்ள பிரம்மாண்ட மாநாட்டிற்கு முன்னதாக, தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், தமிழகத்தில் நிலவும் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக, தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மூலம் சுமார் 50,000 கோடி ரூபாய் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்குச் சென்றுள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை ஒப்பந்தங்களிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் மலிந்துள்ளதாகவும் அவர் சாடினார். வரவிருக்கும் தேர்தலில் இந்த ஊழல் புகார்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.