மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!
மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் சமூக விரோதிகளால் செம்மண் கடத்தப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகள் இதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். அணையின் முக்கிய நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறை காவிரி ஆற்றுப் பகுதியில், நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நள்ளிரவு நேரங்களில் திட்டமிட்டு செம்மண் கொள்ளை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகளின் போக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் இந்தச் சட்டவிரோதச் செம்மண் கடத்தலைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.