கோவை: துணை சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய செவிலியர் பணியிடை நீக்கம்
கோவை அருகே அரசு துணை சுகாதார நிலையத்தையே தனது சொந்த வீடாக மாற்றிப் பயன்படுத்தி வந்த செவிலியர் மீது மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை வடவள்ளி துணை சுகாதார நிலையத்தில் நகர்ப்புற சுகாதார செவிலியராகப் பணியாற்றி வந்த கனிதா என்பவர், தனது கணவர் திமுக நிர்வாகியாக இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனையை வீடாக மாற்றி வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொதுச் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், செவிலியர் கனிதா தனக்கு ஒதுக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் அறைகளை ஆக்கிரமித்து வீடாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட செவிலியர் கனிதாவைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.