திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிரடி
சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, தனது ஆதரவாளர்களுடன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். ஓமலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான தமிழரசு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசு, “கடந்த ஏழு ஆண்டுகளாக திமுகவில் எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட வழங்கப்படவில்லை. சேலம் மாவட்ட திமுகவில் கடும் பிரிவினை நிலவி வருகிறது. குறிப்பாக, அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டே பிரிவினைவாதத்தை உருவாக்கி வருகின்றனர்,” என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறுவதற்காகத் தீவிரமாகப் களப்பணியாற்றப் போவதாகவும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார். அமைச்சருடன் நிலவிய பனிப்போர் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் அதிமுகவில் இணைந்தது, மாவட்ட அரசியலில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.