“வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை”: விஜய் மற்றும் தவெக மீது வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!
துபாயில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கித் தவித்த கோவை மண்டலத்தைச் சேர்ந்த 12 பேரைத் தாயகம் மீட்க நடவடிக்கை எடுத்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அளித்து வரும் வாக்குறுதிகள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை:
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பது இயல்பான ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், “விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்று யாராவது நம்ப முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். விஜய் ஆட்சிக்கு வரப்போவதே இல்லை என்றும், அதனால் அவர் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பெண்களுக்கான நலத்திட்டங்கள்:
புதிய அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளித் தருவது ஆட்சிக்கு வருவதற்காகத்தான் என்றாலும், விஜய் தரப்பு அளித்த வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என அவர் கூறினார். இருப்பினும், “ஒரு பெண்ணாகப் பெண்களுக்கு எது கொடுத்தாலும் சரி என்றுதான் சொல்லுவோம்” என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் வாக்குறுதிகள் குறித்துத் தனது ஐயப்பாடுகளைப் பதிவு செய்தார்.
துபாயிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டவர்கள் கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசனுக்கு நேரில் நன்றி தெரிவித்த நிகழ்வு அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.