திருக்கோவிலூர் மாணவரின் விடாமுயற்சி: 5-வது முயற்சியில் UPSC தேர்வில் 197-வது இடம் பிடித்து சாதனை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சேஷன் என்ற மாணவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய குடிமைப்பணித் தேர்வில் இந்திய அளவில் 197-வது இடத்தைப் பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். ஓய்வு பெற்ற புள்ளியியல் துறை உதவி இயக்குனர் செல்வராஜின் மகனான இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு பயிற்சியைத் தொடங்கினார்.
தொடக்கத்தில் தனியார் அகாடமியில் படித்து வந்த இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குத் திரும்ப நேரிட்டது. இருப்பினும், தனது இலக்கை கைவிடாமல் 2022-ஆம் ஆண்டு முதல் வீட்டிலிருந்தபடியே இணையதளம் வாயிலாகத் தீவிரமாகப் படித்து வந்தார். கடந்த நான்கு முறையும் தோல்வியைத் தழுவிய போதிலும், தளராத விடாமுயற்சியுடன் ஐந்தாவது முறையாகத் தேர்வெழுதி இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். ஆறு ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பலனாக வெற்றி பெற்றுள்ள சேஷனுக்கு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாகப் பாராட்டி வருகின்றனர்.