நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயிக்க மத்தியக் குழு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு
நெல் ஈரப்பதம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள மத்திய உணவு துறையின் குழு செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியை தொடங்கியுள்ளது. தமிழகம் வந்த மத்தியக் குழுக்களில் இது முதன்மை குழுவாகும்; மற்ற குழுக்கள் இன்று தங்கள் மாவட்டங்களில் ஆய்வைத் தொடங்க உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை அதிகரித்ததால், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22% வரை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன்படி, மத்திய உணவு துறையின் உயர் அதிகாரிகள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட குழுவில் உணவு பாதுகாப்புத் துறை உதவி இயக்குநர் ப்ரீத்தி தலைமையில் 2 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றினர். அவர்கள் திருக்கழுகுன்றம் (கீரப்பாக்கம்), திருப்போரூர் (ஒரகடம்), மதுராந்தகம் (படாளம், எல்.என்.புரம்) மற்றும் செங்கை (வில்லியம்பாக்கம்) வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, நெல் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் வேளாண்மைத் துறை அலுவலர்களும் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் தி.சினேகா முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.