திருச்சியில் கொடூரம்: நாய்க்குட்டிகளைச் சுவரில் அடித்துக் கொன்ற பெண் – போலீஸார் தீவிர விசாரணை!
திருச்சி அருகே கம்பரசம்பேட்டை பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டிகளைப் பெண் ஒருவர் கொடூரமாகச் சுவரில் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் நாய்க்குட்டிகளை மட்டுமல்லாமல், அங்கிருந்த மற்ற கால்நடைகளையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இது குறித்து விலங்கு நல ஆர்வலர் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் மீனாட்சி மிஸ்ரா என்பது தெரியவந்தது. தற்போது அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, எதற்காக இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விலங்குகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைச் செயல்கள் சமூகத்தில் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகின்றன.