ராமநாதபுரத்தில் பரபரப்பு: கருப்பசாமி வேடமணிந்து திமுக நிர்வாகி பிரச்சாரம் – இந்து முன்னணி போலீசில் புகார்!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே திமுக நிர்வாகி ஒருவர் கருப்பசாமி வேடமணிந்து அரசின் நலத்திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான ராஜேந்திரன் என்பவர், கருப்பசாமி வேடமணிந்து தாதனேந்தல் கிராமத்தில் மக்களைச் சந்தித்துள்ளார். அப்போது, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், இலவசப் பேருந்து மற்றும் மீனவர்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தார். குறிப்பாக, கருப்பசாமி ‘குறி கேட்பது’ போன்ற பாவனையில் அந்தத் திட்டங்களின் பயன்களை அவர் மக்களிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது.
தெய்வத்தின் வேடமணிந்து அரசியல் பரப்புரை செய்வது இந்துக்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல் என்று இந்து முன்னணி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனிதமான தெய்வ வேடத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திய திமுக நிர்வாகி ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நூதனப் பிரச்சார முறை அப்பகுதியில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.