நியோமேக்ஸ் சொத்துக்களை விற்க நீதிமன்றம் அதிரடி அனுமதி: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் கிடைக்க வழிவகை!
அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மதுரை நியோமேக்ஸ் (NeoMax) நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, நிறுவனத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கு விற்பனை செய்து, அந்தத் தொகையைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிலங்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், யார் வேண்டுமானாலும் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, இதில் எவ்வித உள்நோக்கமும் இருக்கக்கூடாது எனத் தெளிவுபடுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்தத் தீர்ப்பு, பணத்தை இழந்த ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.