மின்மாற்றி அமைக்கக் கோரி போராட்டம்: சேலம் பள்ளக்காடு கிராமத்தில் ஒருவழியாக மின் விநியோகம் தொடக்கம்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில், நீண்ட காலமாக முறையான மின்சாரம் வழங்கப்படவில்லை என்ற புகார் இருந்து வந்தது. மின் தட்டுப்பாட்டைப் போக்க மின்மாற்றி அமைக்கக் கோரி, கிராம மக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்து மின்வாரிய அலுவலகத்தில் பணத்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரும் மின்வாரியம் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் இந்தத் தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.