மானாமதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது போதை கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்டமாக 5 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், இந்த மோதலானது ஒரு சாதிய மோதல் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாய்த்தகராறே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும், போதை கும்பல் நடத்திய இந்தத் தாக்குதலுக்குச் சாதிய பின்னணி எதுவுமில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.