சேலம் மற்றும் ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை!
சேலம்/ஈரோடு: இந்தியாவின் புகழ்பெற்ற வசந்த விழாவான ஹோலி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காகத் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலையில், சேலத்தின் செவ்வாய்பேட்டை, நாராயண நகர், சங்கர் நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து இந்தப் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடினர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் பாகுபாடின்றி வண்ணப் பொடிகளைத் தூவியும், ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டும் உற்சாகமாக நடனமாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இனிப்பு பலகாரங்கள் மற்றும் பாதாம் பால் போன்ற குளிர்பானங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் ஈரோட்டில் வசிக்கும் வடமாநில மக்களும் தங்களின் பாரம்பரிய முறைப்படி வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.