உதகை: குடியிருப்புக்குள் புகுந்து ‘ஜாலியாக’ ஓய்வெடுத்த கரடி – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று, வீட்டின் வளாகத்திற்குள் நீண்ட நேரம் ஓய்வெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில், உணவு மற்றும் தண்ணீருக்காகக் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரோகிணி குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை ஒரு கரடி புகுந்தது. அங்கிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த அந்தக் கரடி, வீட்டின் வராண்டா மற்றும் வளாகப் பகுதிகளில் நீண்ட நேரம் உலா வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அங்கேயே அமர்ந்து மிகவும் நிதானமாக ஓய்வெடுத்துள்ளது.
காலையில் வீட்டின் உரிமையாளர்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பார்த்தபோதுதான், கரடி வீட்டிற்குள் வந்த விஷயம் தெரியவந்தது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கரடி புகுந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் இந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், கரடியைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.