திருவாரூர்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து லாரி அட்டகாசம் – காவல் ஆய்வாளர் வீடு மற்றும் கார் சேதம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, மரங்கள் மற்றும் வீட்டின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வீட்டிலிருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
திருவாரூர் நகர் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் இன்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோரம் இருந்த இரண்டு ராட்சத மரங்கள் மீது பயங்கரமாக மோதியது. மரங்கள் மீது மோதிய வேகத்திலும் லாரி நிற்காமல், அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் அசுர வேகத்தில் புகுந்தது.
அங்கு வசித்து வரும் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி என்பவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதிய லாரி, அடுத்திருந்த மற்றொரு வீட்டின் முகப்புப் பகுதியையும் இடித்துத் தள்ளியது. பெரும் சத்தத்துடன் நடந்த இந்த விபத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் நகர போலீசார், விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா அல்லது இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிக்குள் லாரி புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.