அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!
சென்னை: சென்னை அம்பத்தூரில் அம்பேத்கர் நலச்சங்கத்தின் பெயர் பலகையை மர்ம நபர்கள் நள்ளிரவில் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பட்டறைவாக்கம், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள நியாய விலை கடை அருகே அம்பேத்கர் நலச்சங்கத்தின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அந்தப் பெயர் பலகையைப் பெயர்த்து கீழே தள்ளியுள்ளனர். மேலும், அங்கிருந்த பாதுகாப்புத் தடுப்புகளையும் (Barricades) அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் செயல்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களுடன் அப்பகுதி பொதுநலச் சங்கத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனப் பொதுநலச் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.