சாகோஸ் தீவு விவகாரம்: மாலத்தீவுகளுடன் தூதரக உறவைத் துண்டித்தது மொரீஷியஸ்!
போர்ட் லூயிஸ்: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டம் தொடர்பான அதிகாரப் போட்டியில், மாலத்தீவுகளுடனான தனது அனைத்து தூதரக உறவுகளையும் துண்டிப்பதாக மொரீஷியஸ் நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுக்கூட்டம் (Chagos Archipelago) வரலாற்று ரீதியாக மொரீஷியஸ் நாட்டிற்குச் சொந்தமானது. மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற பிறகும், இத்தீவுகள் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழேயே இருந்து வருகின்றன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், சாகோஸ் தீவை மீண்டும் மொரீஷியஸிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும், சாகோஸ் தீவில் முக்கிய ராணுவத் தளத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற மாலத்தீவுகள், “சாகோஸ் தீவை எங்களிடம் ஒப்படைத்தால், அங்கு அமெரிக்க ராணுவத் தளம் தொடர்ந்து செயல்பட முழு ஒத்துழைப்பு வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளது.
தங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்த மாலத்தீவுகள் மறைமுகமாக முயற்சிப்பதும், அமெரிக்காவின் ஆதரவைப் பெறத் துடிப்பதும் மொரீஷியஸ் அரசை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக, மாலத்தீவுகளுடனான தங்களது தூதரக உறவுகளை அதிகாரப்பூர்வமாகத் துண்டிப்பதாக மொரீஷியஸ் அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புதிய அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.