“வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு!
செங்கல்பட்டு: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான திருமண வாழ்க்கை முறிவுக்கு வந்துள்ள நிலையில், விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு அதிரடியான புகார்களை அவர் முன்வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யும் தானும் பிரிந்து வாழ்வதாகவும், ஒரு நடிகையுடனான விஜய்யின் முறையற்ற நெருக்கமே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனுவில் உள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:
- நடிகையுடன் தொடர்பு: விஜய் ஒரு நடிகையுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததாகவும், அந்தப் படங்களை அந்த நடிகை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பெரும் அவமானம் ஏற்பட்டதாகச் சங்கீதா தெரிவித்துள்ளார்.
- பொருளாதார முடக்கம்: இந்த உறவைத் தட்டிக் கேட்டதால் தன்னைச் சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்ததோடு, பொருளாதார ரீதியாகவும் விஜய் தன்னை முடக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
- ஆதாரங்கள் வெளியீடு: தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்க அந்த நடிகையின் பெயரைத் தற்போது குறிப்பிடவில்லை என்றும், நெருக்கடி ஏற்பட்டால் விஜய்க்கும் அந்த நடிகைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், விஜய்யின் வருமானத்திற்கு ஏற்ப ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், மனைவி என்ற அடிப்படையில் வழக்கு முடியும் வரை தாங்கள் வசித்து வந்த நீலாங்கரை இல்லத்திலேயே தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.