“ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்” – தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) இன்று காலை திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஓபிஎஸ் அவர்களின் இந்த முடிவு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வியை இப்போதே உறுதி செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ்-இன் கருத்துகளைக் கடுமையாகச் சாடிய தமிழிசை, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் யாரை எதிர்த்தாரோ, எந்தக் கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரைச் சட்டமன்றத்தில் அவமானப்படுத்தியதோ, அந்தக் கட்சிக்கே சென்று தன்னை இணைத்துக் கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், அதனைத் ‘தாய் கழகம்’ என்று ஓபிஎஸ் கூறுவது தாய்மையையே கொச்சைப்படுத்தும் செயல்; இதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், திமுகவின் தற்போதைய நிலையை விமர்சித்த அவர், “இவர்களைப் போன்றவர்களைச் சேர்த்துக்கொள்வதுதான் தங்களுக்குப் பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் என்றால், திமுக எந்தளவுக்குத் தோல்வி பயத்தில் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓபிஎஸ் அவர்களின் இந்தச் சேர்க்கை திமுகவின் வெற்றிக்குப் மிகப்பெரிய பாதகமாகவே அமையும்” என்றும், இந்த அரசியல் மாற்றம் திமுகவின் பரிதாப நிலையையே காட்டுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.