கும்பகோணத்தில் அதிசயம்: 51 அடி உயர 65 டன் எடையுள்ள பஞ்சலோக அம்மன் சிலை சேலத்திற்குப் பயணம்!
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 10 ஆண்டு கால உழைப்பில் உருவான 51 அடி உயர பிரம்மாண்ட பஞ்சலோக அம்மன் சிலை, பிரதிஷ்டைக்காகச் சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில் பிரம்மாண்டமான சிலையை நிறுவத் திட்டமிடப்பட்டது. இதற்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் சிற்பக் கூடத்தில் சிலை வடிவமைப்பிற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிறைவடைந்துள்ள இந்தச் சிலை, சுமார் 65 டன் எடை கொண்டது. 51 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ள இந்த ஆதிபராசக்தி சிலையை, ராட்சத லாரி (Multi-axle trailer) மூலம் மிகுந்த பாதுகாப்புடன் பனைமரத்துப்பட்டிக்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. வழியெங்கும் பொதுமக்கள் இந்த பிரம்மாண்ட சிலையைப் பார்த்து வியப்புடன் வணங்கிச் சென்றனர். உலகிலேயே மிகப்பெரிய பஞ்சலோக சிலைகளில் ஒன்றாக இது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.