கோவில்பட்டியில் பயங்கரம்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை!
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதலிலிருந்து தப்பிக்க அனைவரும் சிதறி ஓடிய நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதன்ராஜை அந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மதன்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் பள்ளிச் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக மதன்ராஜ் செயல்பட்டதே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.