மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்தது மாநகராட்சி: மதுரை புதிய மேம்பாலத்தில் மீண்டும் வரையப்பட்டது கள்ளழகர் ஓவியம்!
மதுரை: மதுரை தமுக்கம் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பாலத்தில், சர்ச்சைக்குள்ளான இடத்தில் மீண்டும் கள்ளழகரின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 21-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தின் தூண்களில் மதுரையின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
இதில், வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் புகழ்பெற்ற நிகழ்வு ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஓவியத்தில் கள்ளழகர் உருவம் இடம்பெறாமல், அதற்குப் பதிலாக அந்த இடத்தில் சூரியன் ஒளிர்வது போன்ற படம் வரையப்பட்டிருந்தது. மதுரையின் அடையாளமான சித்திரைத் திருவிழா சித்திரத்தில் கள்ளழகர் படம் தவிர்க்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக இந்து முன்னணியினர் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்க முயன்றனர். அப்போது ஆணையர் புகாரைப் பெற மறுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் விவாதப் பொருளானது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, தற்போது அந்த ஓவியத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்வது போன்ற படம் முழுமையாக வரையப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மதுரை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.