காவலர் தேர்வு: சர்ச்சை வினாக்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழக காவல்துறை தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய 3 வினாக்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை வெளியிட்டது.
அதில், 3 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த 3 வினாக்களுக்கும் உரிய மதிப்பெண்களை வழங்கும்படி தேர்வு வாரியத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பின் மூலம், குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்த பல தேர்வர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.