கரூர்: வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்ட திமுக பேனர்கள் – அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் எச்சரிக்கை!
கரூர்: கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் செல்லும் முக்கியச் சாலை ரவுண்டானாவில், தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் திமுகவினர் பிரம்மாண்டமான பேனர்களை வைத்துள்ளனர். முக்கிய வளைவுப் பகுதியில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, இந்த பேனர்களை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசியல் விழாக்களுக்காக வைக்கப்படும் இது போன்ற பேனர்கள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு இந்த ஆக்கிரமிப்பு பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.