“பாஜகவில் இருந்து 30 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்”: நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு!
சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜகவின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா இன்று (பிப்ரவரி 26, 2026) வெகு விமர்சையாக நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அலுவலகத்தைத் திறந்து வைத்த இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் எல். முருகன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகவும், இறைவன் நினைத்தால் அவர்கள் அமைச்சர்களாகக் கூட நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் உற்சாகமாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.