ஜோதிடருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை: அடுத்தடுத்து அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே போக்சோ வழக்குகளில் சிக்கிய ராமகிருஷ்ணன் என்ற ஜோதிடருக்கு, மொத்தம் 220 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜாதகம் பார்க்க வந்த பெண் ஒருவரின் இரண்டு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இவருக்கு ஏற்கனவே 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சி புகாராக, பரிகார பூஜை என்ற பெயரில் சிறுவன் மற்றும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யத் தூண்டிய வழக்கில் ராமகிருஷ்ணன் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதனை விசாரித்த போக்சோ நீதிமன்றம், தற்போது அவருக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபட்ட அந்த ஜோதிடருக்கு ஒட்டுமொத்தமாக 220 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.