திருக்கோவிலூர் ஏரிகளில் சட்டவிரோத வண்டல் மண் விற்பனை: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள ஏரிகளில், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக வண்டல் மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மேலத்தாழனூர் மற்றும் வெண்மார் ஆகிய இரண்டு ஏரிகளில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவேரி மற்றும் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த சுடலை என்பவர் தெரிவிக்கையில், ஏரிகளில் நடைபெறும் முறைகேடுகளை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இயற்கை வளங்களைச் சூறையாடும் இந்த வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்குத் துணைப் போகும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.